சென்னையில் உள்ள பிரபல நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் அருண் விஜய். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமான அவர், பல படங்களில் நடித்தும் பெரியதாக எந்த படமும் அவருக்கு எடுபடவில்லை.
30 வருடமாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது என்னை அறிந்தால் படம். பின்னர் வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அருண் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் சோதனையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது. மெயில் மூலம் வந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

